சாம்ராஜ்நகர்: அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாத மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ்குமாரை மாற்ற வேண்டும் என்று வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.இது தொடர்பாக மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் உம்மத்தூர் இந்து சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் பணி புரியும் அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதிலும், பணியில் அலட்சியமாகவும் இருந்து வருகின்றனர். அதே போல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ்குமார் கூட எந்த வளர்ச்சி பணிகளும் செய்து கொடுக்கவில்லை. இவர் அரசு அதிகாரிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள தவறியுள்ளதால் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவரை மாற்ற மாநில முதல்வர் எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் மாவட்ட நீதிமன்றத்தின் எதிரேயுள்ள சாலை குண்டும், குழியுமாகவுள்ளது இதை சீரமைத்து கொடுக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் சேதமடைந்துள்ள சாலையில் வாகனங்கள் இயக்க வேண்டியுள்ளது. இத்துடன் மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், தாசில்தார் நீதிமன்றங்கள் சரியாக செயல்படாமல் உள்ளது. இதில் வழக்குகள் தேங்கியுள்ளதால் வக்கீல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பொறுப்பை சரியாக கவனித்துக்கொள்ள முடியாத அமைச்சர் சுரேஷ்குமாரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்றார்.