சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. 2006ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மண்டபாண்ட தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் அமைத்து சமூக மக்களின் வாழ்வில் ஒளியேற்றினார். ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அந்த வாரியங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.
மத்திய பாஜ அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்களை ஒழித்து நல வாரிய அதிகாரங்களை பறித்துள்ளது. இதற்கு அதிமுக அரசு துணை போனது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பன்மடங்கு ஊழல் பெருகிவிட்டது. தமிழகமே திவலாகும் நிலைக்கு சென்று இன்றைக்கு ரூ.5.70 லட்சம் கோடி கடனில் உள்ளது. பாஜவுடன் கைகோர்த்து தமிழக மக்களுக்கு துரோகங்களை அதிமுக அரசு செய்து வருகிறது. எனவே குலால சமுதாய மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.