டெல்லி: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது என அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில வனப்பகுதியில் நக்சல்கள் முகாமிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான சதி செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி நக்சல் தடுப்பு பிரிவு படையின் வாகனத்தை நக்சல் கும்பல் வெடிவைத்து தகர்த்தியதில் ஐந்து வீரர்கள் பலியாகினர். அதையடுத்து பிஜாப்பூர் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (சிஆர்பிஎப்) அடங்கிய கூட்டுக் குழு, வெள்ளிக்கிழமை இரவு தெற்கு பஸ்டர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தியது.
சுமார் 2000 பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இந்த தேர்தல் வேட்டையில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை சுக்மா - பிஜப்பூர் எல்லையில் உள்ள டாரெம் பகுதியில் நக்சல் பிரிவின் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ (பிஎல்ஜிஏ) என்ற அமைப்பை சேர்ந்த கும்பல் பாதுகாப்பு படையினர் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையே நடந்த 6 மணி நேரம் தொடர் துப்பாக்கிச்சூட்டில் நேற்றிரவு 5 வீரர்கள் நக்சல் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் சட்டீஸ்கர் போலீசார் என்று அறிவிக்கப்பட்டது. காயமடைந்த 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவோடு இரவாக பாதுகாப்பு படையினரால் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையே மாயமான 15க்கும் மேற்பட்ட வீரர்களை மீட்க 9 ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இன்று அதிகாலை முதல் மாயமானதாக கூறப்படும் வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் போதுமான தகவல் தொடர்பு வசதிகள் இல்லாததால், மீட்புப்பணிகள் தாமதமான நிலையில், இன்று பிற்பகல் வெளியான செய்தியில், நக்சல் தாக்குதலில் மொத்தம் 22 வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்ததாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 10 பேர் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளன.
நச்சல் தாக்குதலில் 24 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நக்சல் தாக்குதல் சம்பவத்தில் 24 வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்த சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டீஸ்கர் முதல்வர் பாகேல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல் செய்தியையும் வௌியிட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்தவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அசாம் பயணத்தை ரத்து செய்து அவசரமாக டெல்லி திரும்பினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது. சிஆர்எஃப் படையினர் உயிரிழந்ததை பொறுக்க முடியாது; உரிய நேரத்தில் தக்க பதிலடி தரப்படும் என தெரிவித்தார்.