×

எனது ட்விட்டர் கணக்கில் எனக்கே தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகி உள்ளது : பல்டி அடித்த அமைச்சர் பாண்டியராஜன்!!

சென்னை: எனது ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர் மாஃபா பாண்டியராஜன் ஆவார்.ஆர்.கே.நகரில் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் பொம்மை வைத்து பிரச்சாரம் செய்தவர் மாஃபா பாண்டியராஜன்.

இந்த நிலையில், 2017ம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவை ஆதரிப்பது போல் சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து இறந்தவர்களை வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் பாண்டியராஜனை தகுதி நீக்கம் செய்ய பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் அனிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தம்முடைய ட்விட்டர் பதிவை நீக்கினார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.  

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து நீட் பற்றி ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ட்வீட் என்னுடைய அனுமதி இல்லாமல் வந்திருக்கிறது. அது எப்படி என கண்டறிந்து அதை செய்தவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைமில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது. பதிவு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags : Twitter ,Anita ,Minister ,Pandyarajan , அமைச்சர் பாண்டியராஜன்
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...