கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீவன் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது 6 வாகனங்கள், ரூ.46 ஆயிரம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலகம் செய்தல், அத்துமீறல், கீழ்ப்படியாமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சலீவன் வீதியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த 6 கார்களை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அதில் பாஜக கட்சி ஸ்டிக்கர்கள், கொடி, வாக்காளர் பட்டியல், மற்றும் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் கூப்பன்கள், காசோலை, மற்றும் ரூ.46,000 பணம் இருந்தது. இதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்.