சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று, செம்பாக்கம் நகராட்சியில் தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, செம்பாக்கம் 2வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திரண்டிருந்த மக்கள் மத்தியில் சின்னையா பேசுகையில், ‘செம்பாக்கம் பேரூராட்சியாக இருந்தது. இதனை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் எடுத்து சொல்லி நகராட்சியாக மாற்றினேன். குறிப்பாக இந்த பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றதும் செம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும்.
மழைநீர் கால்வாய் அமைத்து கொடுக்கப்படும். கொசுத் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத்துறை உதவியோடு அனைத்து கோயில்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.பிரசாரத்தின்போது, பாஜக மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், செம்பாக்கம் நகர தலைவர் நாகராஜன், பாலசுப்பிரமணியன், பொது செயலாளர்கள் செல்வராஜ், நந்தகுமார், அதிமுக நகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்றம் விஜயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.