புதுடெல்லி:ஊரடங்கு காலத்தில் அலுவலகப்பணிக்கு நேரில் வராத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் வருகை பதிவு குறித்த விவரங்களை திரட்டுமாறு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியதாக கூறி, அதற்கான விவரங்களை பல்கலை நிர்வாகம் சேகரிக்கிறது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் பணிக்கு நேரில் வராத ஊழியர்களுக்கு பயணப்படி வழங்கக்கூடாது என்றும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பணிக்கு வராத ஊழியர்கள் யார் என்பது குறித்த விவரங்களை பல்கலை நிர்வாகம் சேகரித்து வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஜேஎன்யுடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைவெளியின்றியும், விடுமுறை காலத்திலும் செமஸ்டர் தேர்வுக்கிடையேயும் ஆசிரிய ஊழியர்கள் ஆற்றிய கடுமையான பணிணை பல்கலை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும். தேவையின்றி ஊழியர்களை துன்புறுத்தக்கூடாது. நிதியமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து பயணப்படி மட்டுமின்றி, பண்டிகைகால சிறப்பு நிதி, எல்டிசி சிறப்பு தொகுப்பு நிதி போன்றவை குறித்தும் விவரங்கள் கேட்டுள்ளது. இது தேவையில்லாதது.
ஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு விடுமுறையும் இல்லாமல் பணிபுரிந்தனர். இது அவர்களுக்கு ”தேவையற்ற மன அழுத்தத்தை” ஏற்படுத்தியது. ஏனென்றால் பிற பொறுப்புகளுடன் அவர்கள் ஆன்லைனில் கற்பித்தல் மற்றும் மேற்பார்வையை நிர்வகிக்க வேண்டியிருந்தது. சேர்க்கை கடமை, மதிப்பீடு, பாடத்திட்ட திருத்தம் மற்றும் ஆசிரியர்களின் திறன்களைப் புதுப்பிப்பதற்கான பயிற்சி போன்ற பிற கல்விப் பொறுப்புகளுடன் ஆசிரியர்கள் விடுமுறைகளைப் பயன்படுத்தினர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.