சென்னை: நாட்டில் உள்ள சில முக்கிய விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகைக்குவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள விமான நிலைய ஊழியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதையும் மீறி அகமதாபாத், ஜெய்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய 6 விமான நிலையங்களை அதானி குழுமம் என்ற தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அடுத்தக்கட்டமாக திருச்சி, கொச்சி உள்ளிட்ட சில விமான நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் உள்ள 126 விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை விமான நிலைய ஊழியர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் மாலை வரை நடந்தது. இதில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தொழிற்சங்கம், அதிகாரிகள் சங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.