அகமதாபாத்: மகாராஷ்டிரா மாநிலம், மும்பரா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரத் ஜகான்(19). இவர் உட்பட 4 பேர் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு பேரும் அப்போதைய முதல்வர் மோடியை கொல்வதற்கான சதிதிட்டத்துடன் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், இவர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. என்கவுன்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஐஜி சிங்கால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாரட், பார்மர் மற்றும் சவுத்ரி ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி விஆர் ராவல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற பணியாற்றியதாக கூறி 3 போலீசாரை விடுவித்து உத்தரவிட்டார். பார்மர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார்.