பாணாவரம் : தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்ற ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாணாவரம் பகுதியில் பாணாவரம், கூத்தம்பாக்கம், எலத்தூர், புதூர், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள முதியோர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்த விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழுவினர் அவர்களிடம் கையொப்பம் அல்லது கைரேகை பெற்று தபால் மூலம் அவர்கள் அளித்த வாக்கினை பெட்டியில் செலுத்த செய்தனர். இவை அனைத்தையும் வீடியோவில் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.