தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று திருவஞ்சேரி மற்றும் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘திமுக தேர்தல் அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்துள்ளார். அவை அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் இந்த தொகுதிக்கு கண்டிப்பாக பெற்றுத் தருவேன்.
அதுமட்டுமின்றி, திருவஞ்சேரி மற்றும் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது மக்களின் கோரிக்கையின்படி, சாலை வசதிகள் செய்து தருவதோடு, பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க அனைத்து விதமான முயற்சியும் எடுப்பேன். எனவே பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தாம்பரம் தொகுதியில் மீண்டும் என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’’ இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.