×

நரிக்குறவர் கோரிக்கை நிறைவேற்றப்படும்: எஸ்.ஆர்.ராஜா பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி மாடம்பாக்கம் பகுதியில் உள்ள நரிக்குறவர்களை நேற்று காலை சந்தித்து  வாக்கு சேகரித்தார். அப்போது அவர்கள், ‘கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராடியும் எங்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்கவில்லை. அதேபோல எங்களுக்கு வீடு வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.கஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உங்களுக்கு தேவையான ரேஷன் அட்டைகள், வீட்டு வசதிகளை செய்து தருவேன்’ என்றார். இதனையடுத்து, நிச்சயம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். உதயசூரியனுக்கு தான் எங்கள் வாக்கு, என அங்கு இருந்த நரிகுறவர்கள் உறுதியளித்தனர். பிரசாரத்தின் போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Narikkuvar ,SR Raja , Narikkuvar request will be fulfilled: SR Raja campaign
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...