திருச்சி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவையில் மநீம பொருளாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.11.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் மநீம வேட்பாளருக்கு நெருக்கமானவரின் வீட்டில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூர் செங்குந்தபுரம், ராம்நகர் ஆகிய இடங்களில உள்ள ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அவற்றின் உரிமையாளர்கள் வீடுகள் என 6 இடங்களில் வருமான வரித்துறையினர் ேநற்றுமுன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் நிதிநிறுவனங்களில் கடந்த 10 நாட்களில் ரூ.250 கோடி பணபரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த பணபரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்த வருமான துறையினர் இந்த பணம் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது, தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த சோதனை 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சோதனையில் அதிகாரிகள் 2 பேக்குகளில் ரூ.5 கோடி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.