சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியனை ஆதரித்து, அவரது மனைவியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளருமான வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் நேற்று மகளிரணி நிர்வாகிகளுடன் 107வது வார்டு கிழக்கு, மேற்கு பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடமும், சாலையோர வியாபாரிகளிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் பிரிசில்லா பாண்டியன் கேட்டறிந்தார்.
அப்போது, நமது வேட்பாளர் ஜான்பாண்டியன், தொகுதி மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பார். உங்களில் ஒருவராக நின்று கண்டிப்பாக அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவார். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். பிரசாரத்தின்போது அதிமுக, பாஜக, பாமக, புரட்சி பாரதம் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், மகளிரணி மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.