சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தேமுதிக கட்சி தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுபாடு அறையில் இருந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை கேள்விப்பட்ட தேமுதிக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தேமுதிக தலைமை அலுவலகம் முழுவதும் சுமார் 2 மணி நேரமாக சோதனை செய்தனர். நீண்ட நேர சோதனைக்கு பின், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே, இது வெறும் புரளி என தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போனை வைத்து விசாரித்தபோது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீசார் உதவியுடன், கோயம்பேடு தனிப்படை போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர்.