புதுடெல்லி: டெல்லியில் நேற்று திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்தது. மேலும் சில இடங்களில் மழை பெய்தது. டெல்லியில் பனிக்காலம் முடிந்த பிறகு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 35 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தலைநகர் முழுவதும் அனல்காற்று வீசியது. நேற்று திடீரென வானிலை மாறியது. பல இடங்களில் காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வெயில் அடியோடு குறைந்தது. மேலும் சில இடங்களில் சாரல் மழை பெய்ததால் டெல்லியில் குளுகுளு சூழல் நிலவியது. இரவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை எச்சரித்து இருந்தது.
அதன்படி பல இடங்களில் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் 35.2 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. ஆனால் நேற்று அதிகபட்சமாக 33.6 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வெப்பமாக பதிவானது. இதுபற்றி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில்,’ இன்றும் டெல்லியில் மேகமூட்டமாகத்தான் இருக்கும். மேலும் இன்றும் கடுமையான காற்றும் வீசக்கூடும்’ என்று தெரிவித்தனர்.