×

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை!: பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தாராபுரம் வர உள்ளதாக எல்.முருகன் தகவல்..!!

ஈரோடு: தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் அதிமுகவினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன், தேர்தல் பரப்புரைக்காக வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தாராபுரம் வர உள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார்.

பாஜக வேட்பாளர் எல்.முருகன் இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தற்போது தாராபுரத்தில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சார வாகனம் செல்ல முடியாத ஊருக்குள் பாஜக தொண்டர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக வரும் 30ம் தேதி தாராபுரத்தில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை புரிய உள்ளதாக கூறினார். முன்னதாக தமிழகத்தில் இரட்டை இலக்கு இடங்களில் பாஜக வெற்றிபெறுவது உறுதி என தெரிவித்தார். தொடர்ந்து தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் செல்லவிருக்கிறோம் என குறிப்பிட்டார்.


Tags : PM Modi ,Tarapura ,Murugan , Tamil Nadu Assembly Election, Prime Minister Modi, 30th, Tarapuram, L. Murugan
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி