தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக சேகர்பாபு எம்எல்ஏ 2வது முறையாக களம் காண்கிறார். சேகர்பாபுவுக்கு வாக்கு கேட்டு மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் வீதி வீதியாக நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். பின்னர் தாதா முத்தியப்பன் தெரு, திருப்பள்ளி தெரு, வால்டாக்ஸ் சாலை, சத்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட 7 இடங்களில் தேர்தல் பணிமனையை தயாநிதி மாறன் எம்பி திறந்து வைத்தார்.
பின்னர் தயாதிமாறன் எம்பி அளித்த பேட்டி: இந்த ஆண்டு தமிழகத்தின் விடியலுக்கான ஆண்டு. தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் பெறுகிற ஆண்டு. ஏற்கனவே கொரோனாவால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிற நிலையில், பெட்ரோல், காஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அதன் விலைவாசி படிப்படியாக குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.