அன்னூர்: கோவை மாவட்டம், தெற்கு அன்னூர் ஒன்றியம் சார்பில், அவிநாசி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சபாநாயகரும் வேட்பாளருமாகிய தனபால் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட கொங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சபாநாயகரை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டிருந்ததாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் முன்பே வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 93 ஜாதிகள் அடங்கிய சீர்மரபினருக்கு 7 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22 ஜாதி மக்களுக்கு 2.5 சதவீதம் இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். இதனால் கொங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு பின் தள்ளப்படுவார்கள்.
எனவே இந்த புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மனுவை அளித்தவர்கள், தமிழகம் முழுவதும் எங்கள் சமூகத்தை சேர்ந்த 40 லட்சம் பேர் உள்ளனர். இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக, கொங்கு செட்டியார்களின் வாக்குகள் அதிமுகவிற்கு இல்லாமல் போய்விடும் என சபாநாயகரிடம் கூறினர். அப்போது சபாநாயகர் தனபால், ‘‘இந்த இட ஒதுக்கீடு பிரச்சனை சம்பந்தமாக எது வந்தாலும், அது என்ன என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். வார்த்தைகளை விடாதீர்கள்’’ என ஆவேசமாக பதில் அளித்தார். ‘‘கணக்கெடுப்புக்கு பிறகு கமிட்டி அறிக்கையின்படி முடிவெடுப்போம். கவர்னர் ஒப்புதலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று கூறினார். சுமார் 30 நிமிடம் இந்த காரசார விவாதம் நடந்தது.