பெங்களூரு: ஆபாச சி.டி வழக்கில் சிக்கி கொண்டு, எப்படி தப்பி செல்வது என்று விடைதெரியாமல் இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோளி, விரக்தியில் கன்னடர் மற்றும் கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் மீடியாக்களில் பேட்டியளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கன்னட ரக்ஷனே வேதிகேவை சேர்ந்தவர்கள், பெங்களூரு கப்பன்பார்க் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதில் கன்னடர்களை இழிவுப்படுத்து வகையில் பேசிய ரமேஷ் ஜார்கி ஹோளி மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் கன்னட ரக்ஷனே வேதிகேவை சேர்ந்த மகளிர் அமைப்பினர், அவரது வீட்டின் முன்பு மாபெரும் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து டி.சி.பி அனுசேத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.