திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், ‘பூரம் திருவிழா’ உலக பிரசித்திப் பெற்றது. 30க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வாண வேடிக்கை போன்றவற்றை கண்டுகளிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த விழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தாண்டும் இந்த விழா நடத்தப்பட மாட்டாது என முதலில் கூறப்பட்டது.
ஆனால், பூரம் விழாவை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில், கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23ம் தேதி இந்த பூரம் விழா நடக்கிறது.