மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடம்பாடி மாரி சின்னம்மன் கோயிலில் நேற்று இரவு தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரி சின்னம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமை அன்று தெப்ப உற்சவம் நடத்துவது வழக்கமாக உள்ளது. அதேபோல் இந்தாண்டு மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமையான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதனைத்தொடர்ந்து இரவு 11 மணி அளவில் தீர்த்தகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாரி சின்னம்மன் எழுந்தருளி காட்சி தந்தார். இதையடுத்து இன்று காலை 6 மணி வரை, 9 சுற்றுகள் வலம் வந்த மாரி சின்னம்மன், அதன்பின் வீதியுலா வந்தார். இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சின்னம்மனை வழிபட்டனர்.