சேலம்: உரிய ஆவணங்கள் இன்றி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் 36 கோடி மதிப்பிலான 234 கிலோ தங்க ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக தங்க ஆபரணங்கள் மொத்தமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொது மையத்தில் ஆபரணங்கள் வைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு ஆபரணங்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது.
எனினும் ஆபரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன ஓட்டுனர் ஊழியர் உள்ளிட்ட மூன்று பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுக்கப்பட்டு, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல், ரொக்கமாகவோ அல்லது பொருட்களை கொண்டு செல்ல கூடாது என தேர்தல் ஆணையம் விதிமுறைகள் விடுத்துள்ளது. மேலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேலாக பொருளாகவோ, பணமாகவோ எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணம் வைத்திற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
