மஞ்சூர் : மஞ்சூர் அருகே கோரகுந்தா வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குபின் அணைத்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கோரகுந்தா. தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு விலை உயர்ந்த மரங்களும், நெல்லிக்காய், கடுக்காய் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மரங்களும், வனவிலங்குகளும் அதிகமாக உள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
மரம், செடி, கொடி, புல்வெளிகள் காய்ந்து கருகி போயுள்ளது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளதால் குடிநீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வரும் நிலையில் இப்பகுதியில் திடீரென காட்டு தீ பரவியது. ஏற்கனவே, வறட்சியால் செடி, கொடிகள் காய்ந்திருப்பதாலும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினாலும் மள மளவென தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில் தீ தடுப்பு காவலர்கள் உள்பட வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று மண்ணை வாரி இறைத்தும், எதிர் தீ முட்டியும் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து சேதமானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.