×

ஊபா தடுப்புச் சட்டத்தின் கீழ் 72% வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: 2019ம் ஆண்டு ஊபா சட்டத்தின் கீழ் 1,226 வழக்குகள் பதியப்பட்டு, 1948 பேர் கைது செய்யப்பட்டனர். 2015ம் ஆண்டில் 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,128 பேர், 2016ம் ஆண்டில் 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 999 பேர், 2017ம் ஆண்டில் 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,554 பேர், 2018ம் ஆண்டு 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,421 பேர் கைது செய்யப்பட்டனர். 2019ம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் அதிக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடு 2வது இடம் வகிக்கிறது. அந்த வருடத்தில் தமிழகத்தில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டதில், உத்தரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் 498 பேரும், தமிழகத்தில் 308 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு வரப்பட்ட ஊபா சட்டம், இன்றைக்கு அடக்குமுறை சட்டமாக மாறியிருக்கிறது. முகநூல் பதிவிட்டதற்காக இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் எல்லாம் அரங்கேறியுள்ளன. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக ஊபா சட்டத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினத்தவர் மீது ஊபா சட்டம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, சமூக செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தைக் காட்டி அரசு மிரட்டி வருகிறது. இங்கு மதவாதத்தை எதிர்த்தால், மக்கள் உரிமைக்காகப் போராடினால் ஊபா சட்டத்தைப் பயன்படுத்தும் அபாயகரமான சூழல் உள்ளது. மதத்தின் பெயரால் வன்முறை செய்து பல உயிர்களை இழக்க காரணமான இந்து அமைப்புகள் இங்கே தேசப்பற்றாளர்கள்.

ஆனால், மக்களுக்காக நியாயமாகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளா? ஊபா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மோடி தலைமையிலான பா.ஜ. அரசுக்கும், அதற்கு துணைபோகும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம்புகட்டுவார்கள்.

Tags : 72% increase in cases under Uba Prevention Act: KS Alagiri charge
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி