திருவனந்தபுரம்: கோஷ்டி ரீதியாக வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை கண்டித்து மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ கட்சியில் இருந்த ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.சி.சாக்கோ. பலமுறை எம்பி மற்றும் எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீர் என்று இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சோனியாவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து கொச்சியில் நிருபர்களிடம் பி.சி.சாக்கோ கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு முறையாக நடக்கவில்லை. கோஷ்டி ரீதியாக தான் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.
வேட்பாளர் குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் கோஷ்டிக்கு இத்தனை பேர் என்று தேர்வு செய்கின்றனர். வேட்பாளர்களை உம்மன்சாண்டியும் ரமேஷ் சென்னித்தலாவும் மட்டுமே நிர்ணயிக்கின்றனர். கோஷ்டிகள் தங்களுக்கு இடையே வேட்பாளர்களை பங்கிட்டு கொள்கின்றனர். கட்சியின் உயர்மட்ட கமிட்டி கூட இதை கண்டுகொள்வதில்லை. இதை கண்டித்து நான் காங்கிரசில் இருந்து விலகுகிறேன். காங்கிரசிற்கு தேசிய தலைமை இல்லை. காங்கிரசை அழிக்கும் பா.ஜ.வின் சதியை காங்கிரசாரால் சமாளிக்க முடியவில்லை. இதற்கு காங்கிரசின் பலவீனம் தான் காரணம். தற்போது ஜனநாயக முறையில் காங்கிரசில் செயல்பட முடியாத நிலை உள்ளது. நான் வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.