×

பொள்ளாச்சி அருகே பரபரப்பு காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு நண்பர் கொலை?: 2 பேரிடம் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்ட நண்பர் உயிருடன் உள்ளாரா? அல்லது இறந்து விட்டாரா? என்பது குறித்து 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் அருகே உள்ள ஆதியூர் ராமர்கோவில் வீதியை சேர்ந்தவர் அம்சவேல். இவரது மகன் பிரசாத் (எ) புருஷோத்தமன்(20). வாகன பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி தனது  பைக்கை எடுத்து கொண்டு, வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.  அன்றிரவு மற்றும் மறுநாள் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தனது மகன் புருஷோத்தமன் காணவில்லை என புகார் தெரிவித்தனர். போலீசார்  வழக்குப்பதிவு செய்து, மாயமான புருஷோத்தமனை தேடி வந்தனர். ஆனால் புருஷோத்தமன் குறித்த தகவல் தெரிவிக்காமல் போலீசார் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புருஷோத்தமன் சென்ற பைக் மட்டும், சேத்துமடை காளியாபுரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து பைக்கை கைப்பற்றிய போலீசார்,  புருஷோத்தமனின் நண்பர் சேத்துமடையை சேர்ந்த உதயக்குமார்(20) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த 6ம் தேதியன்று புருஷோத்தமன், தனது நண்பரான சேத்துமடையில் உள்ள உதயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பணம்  கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பணம் தருவதாக கூறிய உதயக்குமார், புருஷோத்தமனை மற்றொரு பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.  காண்டூர் கால்வாயருகே செல்லும்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திமடைந்த உதயக்குமார், புருஷோத்தமனை காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். பின்  உதயக்குமார் ஒன்றும் தெரியாததுபோல் இருந்ததுடன், புருஷோத்தமனின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு நண்பர் வந்தாரா? எங்கு சென்றார்?, அவரது செல்போன் சுவிட்ச் செய்யப்பட்டுள்ளது ஏன் என கேட்டு நாடகமாடியுள்ளார்.

 தற்போது புருஷோத்தமனின் நிலை என்னவென்று தெரியவில்லை. உயிருடன் உள்ளாரா? அல்லது உதயக்குமார் தள்ளிவிட்டதில் இறந்துவிட்டாரா? என விரைவில் தெரியவரும். இருப்பினும், உதயக்குமாருக்கு உடந்தையாக மற்றொரு நண்பரான சேத்துமடையை சேர்ந்த கார்த்தி(20) என்பவரும் இருப்பது தெரியவந்துள்ளது. இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர். இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kandur Canal ,Pollachi , Friend killed after being dumped in riotous contour canal near Pollachi?
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!