கோவை: கேரளாவை சேர்ந்த பெண், ‘திருமதி இந்தியா குயின் தமிழ்நாடு’ பட்டம் வென்றுள்ளார்.கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் பானு கலைவாணி. இவரின் கணவர் துரைபாண்டி. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினிமா துறையில் கடந்த 14 வருடங்களாக மேக்கப் ஆர்டிஸ்ட் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் பெங்களூரில் நடந்த திருமதி தென்னிந்தியா குயின் போட்டியில் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார்.இது குறித்து பானு கலைவாணி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரில் கடந்த ஜனவரி 31ல் திருமதிகளுக்கான போட்டி நடந்தது.
இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த 21 பேர் பங்கேற்றனர். எனது தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் போட்டி விதியின்படி, தமிழகத்திற்காக போட்டியில் பங்கேற்றேன். இதில், வெற்றி பெற்று திருமதி இந்தியா குயின் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளேன்.இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு பின் பெண்கள் பலர் வீட்டில் முடங்கியுள்ளனர். அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். அந்த பெண்களும் தங்களின் வாழ்க்கையை வாழ வேண்டும். கணவனை இழந்து மற்றும் தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்கு இலவசமாக மேக்கப் பயிற்சி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.