சென்னை: தேமுதிக சார்பில் ேபாட்டியிட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தொகுதி குறிப்பிடாமல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொண்டர்கள் படை சூழ வந்திருந்து விருப்ப மனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது விஜய பிரபாகரன் அளித்த பேட்டி:
தேமுதிக தொண்டர்களின் விருப்பத்தின்படி, விருப்ப மனு அளித்துள்ளேன். முதல் முறையாக தேமுதிக தரப்பில் விருப்பமனு அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘சென்றுவா வெற்றி நமதே’ என்று விஜயகாந்த் வாழ்த்தி அனுப்பினார். தமிழகத்தில் எங்க நின்றாலும், தேமுதிக தொண்டர்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேமுதிக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நல்ல முறையில் செயல்படுகின்றனர். தேமுதிக தலைவர் மற்றும் பொருளாளர் எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் அங்கு நிற்க நான் தயார். கூட்டணி தொடர்பாக அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் பதிலளிப்பார்கள. இவ்வாறு அவர் கூறினார்.