தமிழக அரசு ஒரு இடைக்கால பட்ஜெட்டிற்கு பதிலாக ஒரு முழு பட்ஜெட்டை போட்டுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் ஒரு முழு பட்ஜெட்டை போடுவது என்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்தியா முழுவதும் மைனஸ் 7.7 வளர்ச்சி இருக்கிறது. ஆனால், தமிழகம் மட்டுமே 2.02 வளர்ச்சி இருப்பதாக பார்க்கப்படுகிறது. 11 சதவீதமாக வளர்ச்சி மேம்படும் என்று இவர்கள் திட்டமிட்டிருப்பதும் வரவேற்ககூடியது தான். இந்த சூழலில் தமிழகத்தில் ஒட்டுமொத்த கடன் என்பது ரூ.5.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 85 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து கடன் வாங்குவதற்கும் திட்டமிட்டிருந்தார்கள். என்னை பொருத்தவரை இந்த அளவிற்கு கடன் அதிகரித்துள்ளது என்பது மிகவும் அதிகம் தான். ஆனால், வளர்ச்சி குறைவான காலங்களில் அரசு செலவு செய்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்தவை கிடைக்கும்.
இதனால், இவர்கள் ₹43 ஆயிரம் கோடி மூலதன செலவீனத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள். இலவசங்களை மட்டும் அறிவிக்காமல் தொழில் வளர்ச்சிகளுக்கு இவர்களின் மூலதனம் செல்வது என்பது வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும், 15வது நிதி கமிஷன் கொடுத்துள்ள வரம்பு என்பது ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் அதற்கான கடன் அளவு என்ற இரண்டும் வரம்புக்குள் தான் உள்ளது. இது கட்டுக்குள் இருப்பதையும் நாம் பார்க்க வேண்டும். செலவு என்பது மூலதனத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும். இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்புகளை கடந்த முறை நடைபெற்ற பட்ஜெட்டுகளில் அறிவிக்காமல் இந்த வருட பட்ஜெட்டில் கூறுகிறார்கள். இதனால், இது ஒரு அரசியல் சார்ந்த ஒரு பட்ஜெட் அறிவிப்பு போன்றே கருத முடிகிறது. இது ஒரு இடைக்கால பட்ஜெட் போன்று இருக்க வேண்டும். ஆனால், இதை ஒரு முழு பட்ஜெட்டாக இவர்கள் அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சூழலில் பெரிய அளவிலான இலவச அறிவிப்புகள் இல்லாமல் பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சி, விவசாயத்திற்கு ரூ.95 ஆயிரம் கோடி என ஒதுக்கியுள்ளார்கள்.
இது ஒருபக்கம் இருந்தாலும் இவர்களுக்கானவர்களை மட்டும் நம்பாமல் முழுமையாக விவரம் தெரிந்தவர்களை வைத்து ஒரு குழு அமைக்க வேண்டும். பின்னர், அதை நிறைவேற்றியிருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியையும் 5 ரூபாய் வரையில் குறைக்கும் நிலைப்பாட்டில் இரு அரசுகளும் உள்ளதாக தெரிகிறது. சில விஷயங்களில் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் என்பது நன்மை என்றாலும் தேர்தல் வரும்போது மட்டும் விலை குறைப்பு போன்ற யோசனைகள் இவர்களுக்கு வருகிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மறுபடியும் விலைகளை இவர்கள் ஏற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதேபோல், நேரடி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எல்லோருக்கும் கடன் தள்ளுபடி என்பது ஒரு சரியில்லாத போக்கு. கடன் தள்ளுபடி விஷயத்தை இவர்கள் அவசர, அவசரமாக அறிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. தள்ளுபடி அறிவிப்புகளை கடந்த முறை நடைபெற்ற பட்ஜெட்டுகளில் அறிவிக்காமல் இந்த வருட பட்ஜெட்டில் கூறுகிறார்கள். இதனால், இது ஒரு அரசியல் சார்ந்த ஒரு பட்ஜெட் அறிவிப்பு போன்றே கருத முடிகிறது.