சென்னை: தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 9,613 பேருக்கு இரவோடு இரவாக இ-மெயில், செல்போன் மூலம் பணி நியமன ஆணையை தமிழக மின்வாரியம் அனுப்பியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடந்த 21ம் தேதி கூறுகையில் மின்வாரியம் தனியார்மயமாக்க உள்ளதாக ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது.
மின்வார வாரியம் தனியார்மயம் ஆகாது. தமிழக அரசின் கீழ்வாரியாகவே வேலைவாய்ப்பை உருவாக்கி தரப்படும். மேலும் கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுப்பதாகத் தெரிவித்திருந்தோம். காலிப்பணியிடங்கள் அதிகமாயிருந்த காரணத்தினால் முதல்வர் 10 ஆயிரம் பேரை எடுக்க அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஆணையிட்டோம். இதில் தடை பெற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். அவர்களிடம் பணி செய்த நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினால் அடுத்த கணமே இந்த வாரத்திலேயே 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும் என்று கூறினார். இதையடுத்து புதியதாக கேங்மேன் பணியாளர்கள் தேர்வுக்கான நடவடிக்கைகள் 70 சதவீதப் பணிகள் முடிந்து விட்டது.
அதேநேரத்தில் ஒப்பந்த பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 9,613 பேருக்கு தமிழ்நாடு மின்வாரியம் இரவே அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளனர். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.