கும்பகோணம் தொகுதிக்கு இலைகட்சி சார்பில் போட்டியிட நகர செயலாளரும், மாஜி எம்எல்ஏவுமான ராமநாதன், மாஜி நகர செயலாளரும், மாஜி நகர்மன்ற தலைவரின் கணவருமான சேகர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். இதில் சேகர் தரப்பினர் சமூக ரீதியாக உள்ள அமைச்சர்களையும், ராமநாதன் தரப்பினர் மாமா என்று செல்லமாக அழைத்து இபிஎஸ்சையும் நம்பியுள்ளார்களாம். இருவரில் யார் போட்டியிட்டாலும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பார்கள் என இலைகட்சிக்குள் பேசிக்கிறாங்களாம். ஒவ்வொரு தேர்தலின்போதும் ராமநாதனுக்கும், உள்ளாட்சி தேர்தலில் சேகர் தரப்பிற்கே தலைமை சீட் வழங்கி வருகின்றது. இதனால் தொண்டர்கள் கட்சி தலைமைக்கு, ‘அஇஅதிமுக தலைமையே குடந்தை சட்டமன்ற தொகுதியை திரும்பிப் பார்’ என்று தலைப்பிட்டு, ‘ராமநாதன் ரூ.200 கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டு தொண்டர்களை மதிப்பது இல்லை. குடந்தை சட்டமன்ற தொகுதியை ஜெயிக்க வேண்டுமா? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடு, இங்ஙணம், கொடி பிடிக்கும் தொண்டன்’ என்று அச்சிட்டு, தலைமையிடத்திற்கு தொடர்ந்து புகார் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த முறை இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், இலைகட்சியினரே தோற்கடித்து விடுவார்கள் என்று தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.