செய்யூர்: மதுராந்தகம் அருகே இயங்கும் தனியார் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஒன்றியம் தச்சூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கல்குவாரியால், சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் என தச்சூர் மற்றும் பேக்கரணை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, கடந்த 13ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மதுராந்தகம் டிஎஸ்பி கவினா, சமரசம் பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால், இதுவரையில் போலீசார் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தச்சூர்- பவுஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து டிஎஸ்பி கவினா, சம்பவ சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் முடிவு தெரியும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.