×

ஆபாசமாக திட்டி வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் வியாபாரி வெட்டிக் கொலை டிரைவர் உட்பட 5 பேர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவர் அதே பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்தார். மேலும் அதன் அருகிலேயே தானும் கடை நடத்தி, வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த செல்வராஜை, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, கடையில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு, பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதனிடையே கொலையாளிகள் தாக்கியதில், முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த செல்வராஜ்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன் செல்வராஜ் கடையின் அருகில் உள்ள டீக்கடையில், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் தகராறு செய்துள்ளனர். அதனை செல்வராஜ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அந்த 3 பேர் கும்பல், செல்வராஜை கடுமையாக தாக்கி உள்ளனர். செல்வராஜ், இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  
இரு தினங்களுக்கு முன்பு தான் அந்த சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளான்.

தான் சிறை செல்லக் காரணமாக இருந்த செல்வராஜை பழி வாங்குவதற்காக தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தினர். விசாரணையில் அவர்கள் கொலையாளி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் செல்வராஜிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த ஈசாக் என்ற சூர்யா (28) என்பவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர். அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த ஈசாக் (28), அவர்களது நண்பர்களான பிரகாஷ் (24), சச்சின் (26), அஜித் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். ஈசாக் வாக்கு மூலத்தில் கூறியதாவது: செல்வராஜிடம் ஈசாக் டிரைவராக வேலை பார்த்துவந்தார். வேலைக்கு முறையாக வராததால்  செல்வராஜ் கண்டித்துள்ளார். ஈசாக்கை ஆபாசமாக திட்டி வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஈசாக் செல்வராஜை அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து  அவர்களை கைது செய்தனர்.

Tags : Vettel ,Diddy , 5 arrested for cutting off driver
× RELATED திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே...