×

காமராஜரை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி வாக்காளர்கள்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி என்ற பெயருடன் இருந்தபோது பாரம்பரியமாக காங்கிரஸ் வசமே இருந்து வந்தது. 1951ம் ஆண்டு மார்ஷல் நேசமணி இங்கு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957ல் தாணுலிங்க நாடார், 1962ல் மார்ஷல் நேசமணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1969ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1971ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு காமராஜர் வெற்றிபெற்றார். 1977ல் குமரி அனந்தன் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980, 1984, 1989, 1991ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் உடைந்து தமாகா கட்சியாகிய நிலையில் அப்போதும் 1996, 1998 ஆகிய தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்டு மீண்டும் டென்னிஸ் வெற்றி பெற்றார். நீண்ட காலம் டென்னிஸ் நாகர்கோவில் மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் முதல் முதலாக பா.ஜ நாகர்கோவில் மக்களவை தொகுதியை கைப்பற்றியது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். தொடர்ந்து 2004ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு பெல்லார்மின் எம்.பி ஆனார். 2008ம் ஆண்டு தொகுதிகள் மறு சீரமைப்புக்கு பின்னர் நாகர்கோவில் மக்களவை தொகுதி ‘கன்னியாகுமரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதுவரை திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியுடன் மக்களவை தேர்தலில் இணைந்து இருந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதன் பிறகு கன்னியாகுமரி மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. குமரி மாவட்ட மக்கள் முழுமையாக குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்களவை பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றனர். அதன்பிறகு 2009ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை  தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றிபெற்றார். 1991ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்த போதிலும் 1996ம் ஆண்டு முதல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார். இந்த முறை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் வசம் சென்றது. வசந்தகுமார் எம்.பி மறைவை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.


அன்னிக்கு காசே இல்ல..
இன்னைக்கு 500 கோடி
அதிமுக எம்எல்ஏவின் அசுர வளர்ச்சி’

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் பகுதியில்  கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசியதாவது:  தேர்தல் என்பது திருவிழா அல்ல. அன்று ஒருநாள் நீங்கள் எடுக்கின்ற முடிவு அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும். கொள்ளையடித்த பணத்தை வைத்து ஏழை எளிய மக்களின் ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று ஆளும்கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர். அதை முறியடிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமையப்போகிறது.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் எனக்கு வருமான வரி கட்டும் அளவிற்கு வசதி இல்லை என்று கூறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்று 500 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார். அந்த அளவிற்கு ஊழலில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு  வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினருக்கு 500 கோடி என்றால் அமைச்சர் பெருமக்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என பொதுமக்களை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து ஊழல்வாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என்றார்.



Tags : Kamaraja , Who made Kamaraj win Kanyakumari voters
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை