சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட 308 வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ”கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுப்பூர்வமான போராட்டம். இந்த போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர். இந்த போராட்டங்களின்போது, சட்டம்-ஒழுங்கினை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. எனினும் சில விரும்பத் தகாத சம்பவங்கள் இந்த போராட்டங்களின்போது நடந்துவிட்டன. இந்த வழக்கிற்குள் உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில்கொண்டு, இந்த போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற சட்டப்பூர்வமாக திரும்பப் பெற முடியாத ஒரு சில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை, சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று, தமிழக அரசு திரும்பப்பெறும்” என்றார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட 308 வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.