புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி 4 மாநிலங்களுக்கு 2 வார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முதல் வாரத்தில் இருந்து பிரதமர் மோடி 4 மாநிலங்களில் சூறாவளி பிரசாரம் செய்வதற்கான சுற்றுப் பயணத்தை பாஜ திட்டமிட்டுள்ளது. சில மாநிலங்களில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும், சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும், சில மாநிலங்களில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் பாஜ முயற்சிக்கிறது. பிரதமர் மோடி முதலில் கேரளா செல்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். இங்கு பாஜ.விற்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருக்கிறார்.
பின்னர், மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் பாஜ உறுதியாக உள்ளது. ஏற்கனவே, 2 முறை அவர் மேற்கு வங்கத்திற்கு சென்று வந்துள்ளார். மார்ச் 7ம் தேதி கொல்கத்தாவின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மூன்றாவதாக தமிழகத்துக்கு செல்லும் அவர், பின்னர் அசாம் மாநிலம் செல்கிறார். அங்கு பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பாஜ நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்கின்றார். சமீபமாக பிரதமர் இரண்டு முறை அசாம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.