மதுரை: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு நிறுவன பங்குதாரர் ஜெய்சங்கர். ஜிஎஸ்டி வரி புலனாய்வு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கடந்த 5 ஆண்டுகளில் இவர் பெரும் தொகையை வரி ஏய்ப்பு செய்தது தெரிந்தது.
இதன்பேரில் மதுரை ஜிஎஸ்டி வரி புலனாய்வு பிரிவினர், சிவகாசியில் உள்ள அவரது பட்டாசு ஆலை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தினர். தொடர் சோதனைகளில் முதல் கட்டமாக 2016-17ம் ஆண்டில் மட்டும், அவர் 2.52 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நிறுவனத்தின் விற்பனை கணக்குகளும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டு முதல் 2020 வரை 20 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிந்தது. இதுதவிர, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை ரகசிய குறியீடாக வைத்து ஹவாலா மோசடிகளிலும் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ள ரசீது தொகைக்கு மாறாக, பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிந்தது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக நடந்த இந்த ஹவாலா மோசடிகள் குறித்தும் முழுமையாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பட்டாசு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ஜெய்சங்கரை, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.