நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சைய்யது மீரான் (58). 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் நாகூர் அதிமுக நகர செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், சசிகலா வரவேற்பு போஸ்டரில் செய்யது மீரான் புகைப்படத்தை அச்சிட்டு, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதே சுவரொட்டிகள் சென்னையிலும் ஒட்டுப்பட்டு இருந்ததால் அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாம். அதிமுக விசுவாசியாக இருந்த சைய்யது மீரானுக்கு பொறுப்பு கொடுத்தவுடன் இப்படி செய்துவிட்டாரே என கட்சி நிர்வாகிகள் புலம்பினர். அவரை அழைத்து ரகசியமாக விசாரணை நடத்தியபோதுதான் அப்படி ஒரு போஸ்டர் ஒட்டியிருப்பததே அப்போதுதான் அவருக்கு தெரிந்ததாம். 33 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் தனக்கு நகர செயலாளர் பதவி கிடைத்துள்ளது. தான் எப்போதுமே அதிமுகவின் உண்மையான விசுவாசிதான். கட்சியில் உள்குத்து காரணமாக கொதிப்படைந்தவர்கள் சிலர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர் என்கிறார் மீரான். இது குறித்து நாகூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகாரும் கொடுத்துள்ளாராம் சைய்யது மீரான்.