திருவனந்தபுரம்: கேரளாவில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதி ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வேலை வழங்காமல், தற்காலிக பணியாளர்களுக்கு கேரள அரசு ரகசியமாக வேலை வழங்கி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அரசின் இந்த செயலை கண்டித்து, கடந்த சில வாரங்களாக திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பாக காங்கிரசாரும், காங்கிரஸ் மாணவர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் மாணவர் சங்கமான கேஎஸ்யு சார்பில், திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை நோக்கி நேற்று கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர் தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இந்த மோதலில் 10 போலீசார் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.