×

உற்றுநோக்கி கண்டறியும் பார்வைத் திறன்: முதோல் இன வேட்டை நாய் இந்திய விமானப்படையில் சேர்ப்பு.!!!

பெங்களூரு: இந்திய விமானப்படையில் முதோல் இன வேட்டை நாய் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த முதோல் நாய்களை மராட்டிய மன்னர் வீர சிவாஜியும், பாகல்கோட்டை மன்னர் கோர்படாவும் தங்களது படையில் போருக்காக பயன்படுத்தியுள்ளனர்.



இந்த முதோல் இன வேட்டை நாய்கள் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத்திலும் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், இந்திய விமானப் படையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக முதோல் இன வேட்டை நாய்கள், படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
 
கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 4 முதோல் இன வேட்டை நாய்க் குட்டிகளை இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் ஒப்படைத்தார்.



முதோல் நாய்கள் குறித்து இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி கூறுகையில், முதோல் இன வேட்டை நாய்களுக்கு தொலைதூரத்தில் உள்ளவற்றையும் கூர்மையாக உற்றுநோக்கி கண்டறியும் பார்வைத் திறன் உள்ளது.

இதனால், விமான படையில் ஓடுதளத்தை கண்காணிப்பதற்கும், ராணுவத்தில் எல்லையை கண்காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.

விமான ஓடுபாதையில் சுற்றித்திரியும் பறவைகளை விரட்டுவதற்கு நிபுணர்களை கொண்டு இந்த நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார். கடினப் பொருளை துண்டிக்கும் வகையில்,  
தாடைகள் நீண்டு, சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சிறப்பாக வேட்டையாடும் திறன் கொண்டது. எனவேதான்,  இந்த வகை நாய்களால் நாட்டின் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க இயலும் என்றும் தெரிவித்தார்.

Tags : Indian Air Force , Visual acuity: First breed of hunting dogs enlisted in the Indian Air Force. !!!
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...