×

மகனுக்கு ஏடிஎஸ்பி பதவி உயர்வு தராவிட்டால் சசிகலா அணிக்கு போவதாக எம்எல்ஏ மிரட்டல்?

சென்னை: தன்னுடைய மகனுக்கு ஏடிஎஸ்பி பதவி உயர்வு வழங்காவிட்டால் சசிகலா அணிக்கு சென்று விடுவதாக அதிமுக எம்எல்ஏ மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டாம். தேர்தலுக்குப் பிறகு பதவி உயர்வு வழங்கலாம் என்று அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் பவன்ராஜ்.  

இவரது மகன் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு பெற்று தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். தன் மகனுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சசிகலா அணிக்கு சென்று விடுவேன் என்று தமிழக அரசுக்கு பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் மிரட்டல் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆரம்பத்தில் டிடிவி அணியில் இருந்தார். பின்னர் திடீரென்று எடப்பாடி அணிக்கு தாவினார். தற்போது சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளதால், அவருக்கு ஆதரவான நிலையை பவுன்ராஜ் எப்போது வேண்டுமானாலும் எடுப்பார் என்று அதிமுக தலைமை கருதுகிறதாம். இதற்காக அவரை உளவுத்துறை கண்காணிப்பிலேயே வைத்துள்ளார்களாம்.

இந்தநிலையில் அவர் மிரட்டல் கோரிக்கை வைத்துள்ளதால், அவரை சமாதானப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்காக அவரது மகனுக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிஜிபி அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து மேலும் சிலருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை டிஜிபி அலுவலக அதிகாரிகள் தயாரித்து வருகின்றார்களாம். ஓரிரு நாளில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : MLA ,ATSP ,Sasikala ,team , Sasikala, MLA, intimidation if son is not given ADSP post
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...