×

பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசு பல கோடி கடன் தருவதாக ராகுல் காந்தி சாடல்...என்னிடம் தமிழிலேயே பேசுங்கள் எனவும் அன்பு வேண்டுகோள்!!

புதுச்சேரி :பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வந்துள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சென்றடைந்த ராகுல்காந்தி,  மீனவ கிராம பெண்களை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்காத நிலையில், பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசு பல கோடி கடன் தருகிறது. கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

சொந்த வீட்டில் வந்த உணர்வு ஏற்படுகிறது. மீனவர்களுக்கு எதிர்கால திட்டங்களை சொல்ல வந்துள்ளேன். உங்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளுடன் நான் மீண்டும் புதுச்சேரி வருவேன். அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும் போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன்.அப்போது தான் மீனவர்கள் படும் கஷ்டங்கள் தெரியும்,என்றார். இதனிடையே கலந்துரையாடலின் போது, புதுச்சேரி மக்களிடம் தமிழில் பேச ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களின் நிலத்திற்கு வந்துள்ளேன். என்னிடம் பேசுபவர்கள் தமிழியிலேயே பேசுங்கள். அப்போது தான் இங்கிருக்கும் மீனவ மக்கள் அனைவருக்கும் புரியும்,என்றார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு புதுச்சேரி- கடலூர் சாலை ஏஎப்டி திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் மாலை 5.45 மணியளவில் அவர் சென்னை புறப்பட்டு செல்கின்றார்.

Tags : Rahul Gandhi ,government ,bosses , ராகுல் காந்தி
× RELATED சொல்லிட்டாங்க…