×

உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணை கூட 8 வழிச்சாலை திட்டத்திற்கு தரமாட்டோம் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!!

சென்னை: சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று சென்னை வந்தார். சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் - சென்னை 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம். ரூ.7500 கோடி மதிப்புள்ள 8 வழிச்சாலை திட்டப்பணி இந்த ஆண்டே தொடங்கும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன், விவசாயிகள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும், என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறி வரும் நிலையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று மத்திய அமைச்சரின் கருத்தால் சேலத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழக முதல்வர் பயிர்கடனை தள்ளுபடி செய்து நிலத்தை பறிப்பதற்கான முயற்சி என்றும் உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணை கூட 8 வழிச்சாலை திட்டத்திற்கு தரமாட்டோம் என்றும் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.


Tags : Nitin Gadkari , Union Minister, Nitin Gadkari
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி