×

காங். அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக எம்.எல்.ஏ.வேட்டை: வரும் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள்: புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி.!!!

புதுச்சேரி: எங்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பாஜக எங்கள் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுகிறது என  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, திமுக 3 மற்றும் சுயேட்சை 1 ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10 ஆக குறைந்தது. காங்கிரஸ் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தகது. அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் 3 (பாஜக) என மொத்தம் 14 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு நிகழ்த்தினர். அப்போது சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில முதல்வர் நாராயணசாமி, எங்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பாஜக எங்கள் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுகிறது. 3 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் திட்டம் பற்றி மக்களுக்குத் தெரியும், 2021 தேர்தலின் போது அவர்கள் தகுந்த பதிலை தருவார்கள்.

கடந்த 4 ஆண்டுகள் எங்கள் அரசுக்கு கொந்தளிப்பாக இருந்தன. கிரண் பேடி அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில் சிக்கல்களை உருவாக்கி வருகிறார். அவரது செயல்களுக்கு எதிரான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளித்தன. புதுச்சேரி மக்கள் மதச்சார்பற்ற கட்சிகளை விரும்புகிறார்கள். அவர்கள் வகுப்புவாத கட்சிகளை அனுமதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


Tags : BJP ,MLA ,Narayanasamy ,government ,elections , Cong. BJP MLA hunt to overthrow government: People will retaliate in coming elections: Puducherry Chief Minister interview !!!
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...