சேலம்: சேலம் மாவட்டத்தில் 7,100 இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 7,100 பெண்களுக்கு, திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
சேலம் நெடுஞ்சாலை நகரில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து ெகாண்டு, 35 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம், மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்த 2,363 பெண்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் ₹5.90 கோடியும், பட்டம் பெற்ற 4,737 பெண்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 23.68 கோடியும் என மொத்தம் 7,100 பேருக்கு 29.59 கோடி திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் வீதம் 7,100 பவுன் தங்கம் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 19,381 மகளிர் சுயஉதவிக்குழுக்களில் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும், 2,000 பொருட்களை விற்பனை செய்ய, மகளிர் திட்டம் சார்பில்உருவாக்கப்பட்ட ‘‘சேலம் மதி’’ என்ற செல்போன் செயலியை முதல்வர், அறிமுகம் செய்து வைத்தார்.