திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் வருவதையொட்டி பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. விவசாய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பில் இருக்கிற உள்ளடி வேலைகள் பொதுமக்களுக்கு தெரியவில்லை. இப்படி ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே ஆளும் கட்சியினருக்கு மட்டும் ரகசியமாக தெரிவித்ததால் அவர்கள் புதிதாக கடன் பெற்று இருக்கிறார்கள். கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த பிறகு கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் அந்த பழைய பாக்கிகளை தள்ளுபடி செய்யக் கூடாது என ரகசியமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த ஏமாற்று வேலையை கைவிட்டு விவசாயிகள் 2017ல் பெற்ற அந்தக் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். பிப்.5ம் தேதி அறிவிப்புக்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் புதிதாக கடன் பெற்றவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யக் கூடாது. அது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.