சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கவலை அளிக்கிறது என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் இந்த மாதம் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி 25 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவால் மக்கள் பொருளாதார நிலையில் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து,ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.