சென்னை: ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 55,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விதமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9 பேருக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனை பட்டாக்களை வழங்கி, துவக்கி வைத்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, செங்கோட்டையில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு என மொத்தம் ₹7 கோடியே 14 லட்சத்து 68 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.