×

“கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடியால் 90% பயனடைந்தது அதிமுகவினர் மட்டுமே” :கே.என்.நேரு குற்றச்சாட்டு!

திருச்சி : திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு, ₹1.50 லட்சம் மதிப்பில் 2 நபருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் முடநீக்கியல் சாதனங்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.என்.நேரு அளித்த பேட்டி: கடந்த 4 ஆண்டுகளில் அதிமுகவினர் விவசாய கடனுக்கு கூட்டுறவு வங்கிகளுக்கு சென்றால் அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்பட்டது, திமுகவினர் யாருக்கும் விவசாய கடன் பெரிய அளவில் வழங்கப்படவில்லை. எனவே அதனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் 90 சதவீதம் பயனடைவது அதிமுகவினர் மட்டுமே.

சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதையும் தமிழக அரசு பறிமுதல் செய்யவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவருடைய சொத்துக்களை பொறுமையாக கைப்பற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போல. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னோட்டமாக திருச்சி மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. திருச்சி மாநாடு தள்ளிப்போகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் மூன்றாவது அணி அமைப்போம் என்று கூறியுள்ளார். எனவே திமுகவுடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றார்.

Tags : AIADMK ,KN Nehru , கே.என்.நேரு
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...